அரச குடும்பத்தை விமர்சனம் செய்த குற்றச்சாட்டில் தாய்லாந்து பெண் ஒருவருக்கு 43 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அரச குடும்பத்தை விமர்சித்ததற்காக தாய்லாந்தில் ஒருவருக்கு வழங்கப்பட்ட மிகக் கடுமையான தண்டனையாக இது பாதிவாகியுள்ளது.
அரச குடும்பத்தை விமர்சிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் ஒலிப்பதிவுகளை வெளியிட்ட குற்றச்சாட்டிலேயே 63 வயதான அஞ்சன் என்ற பெண்ணுக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தின் 'லெசே மெஜஸ்டி' ( lèse-majesté law) என்ற சட்டம் முடியாட்சிக்கு உரியவர்களை அவமதிப்பதைத் தடை செய்கிறது.
2014 – 2015-ஆம் ஆண்டுகளில் சமூக ஊடகங்களில் அஞ்சன் வெளியிட்ட பதிவுகள் இந்த சட்டத்தை மீறும் வகையில் அமைந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
தனது குற்றத்தை அஞ்சன் ஏற்றுக்கொண்டு மன்னிப்புக் கோரியதை அடுத்து அவருக்கு விதிக்கப்பட்ட 87 ஆண்டு கால சிறைத் தண்டனை பாதியாகக் குறைக்கப்பட்டது.
அஞ்சனுக்கு எதிரான விசாரணை மூடிய அறைகளுக்குள் நடத்தப்பட்டது. அவருக்கு எதிரான ஆதாரங்கள் தேசிய பாதுகாப்பு கருதி இரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த சில வாரங்களில் 40 செயற்பாட்டாளர்கள் மீது லெசே மெஜெஸ்டி சட்டத்தின் கீழ் தாய்லாந்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தாய்லாந்து அரசுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதனை ஒடுக்கும் நோக்கிலேயே கடந்த பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த இந்தச் சட்டத்தை அரசு கையில் எடுத்துள்ளதாக சர்வதேச அளவிலும் உள்நாட்டிலும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
Category: உலகம், புதிது
Tags: தாய்லாந்து